×

இறுதிச்சடங்கில் பங்கேற்ற போது மணிப்பூரில் 5 பேர் சுட்டுக் கொலை : ‘குகி’ தீவிரவாத அமைப்பு அட்டூழியம்

இம்பால்:மணிப்பூரில் இறுதிச் சடங்கில் பங்கேற்ற மக்கள் மீது குகி தீவிரவாத அமைப்பு நடத்திய துப்பாக்கிசூடு தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் பலியாகினர். மணிப்பூரில் செயல்பட்டு வரும் ‘குகி’ என்ற தீவிரவாத அமைப்பு பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் மீது அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த குழுவை அழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மணிப்பூரின் ஹிங்கொஜங் மாவட்டத்தில் கடந்த 10ம் தேதி பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் ‘குகி’ தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி அம்மாநிலத்தின் கங்க்பொக்பி மாவட்டம் கங்மம் கிராமத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கிராம மக்கள் பங்கேற்றனர்.

அப்போது, அங்கு வந்த குகி தீவிரவாதிகள் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதுகுறித்து போலீஸ் ஐஜி லன்ஸ் கிப்கன் கூறுகையில், ‘தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவத்தில் குல்லன் கிராமத்தின் தலைவர் மற்றும் குழந்தை உட்பட நான்கு பொதுமக்கள் ‘குகி’ தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் போது காயமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர்’ என்றார்.



Tags : Manpur ,Kugi , மணிப்பூர் ,சுட்டுக் கொலை
× RELATED மணிப்பூரில் மீண்டும் வன்முறை;...