சென்னை: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 6நாட்களாக பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ச்சியாக உயர்ந்து, மக்களை வேதனைக்கு ஆளாக்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் பெட்ரோல் மீதான வரியில் ரூ.3ஐ தமிழக அரசு குறைத்தது. இதனால், பெட்ரோல் விலை ரூ.100க்குள் வந்தது. ஆனால், அதன் பின்னர் தொடரும் விலை உயர்வால், மீண்டும் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக 7வது நாளாக இன்றும் , பெட்ரோல் லிட்டருக்கு 26 காசும், டீசல் லிட்டருக்கு 33 காசும் அதிகரித்தது. அந்த அடிப்படையில், சென்னையில் நேற்று பெட்ரோல் ரூ.101.53க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 26 காசு அதிகரித்து, ரூ.101.79 க்கு விற்கப்படுகிறது. மேலும், டீசல் ரூ.97.26க்கு விற்கப்பட்ட நிலையில், 33 காசு அதிகரித்து, ரூ.97.59க்கு விற்கப்படுகிறது. தொடர் விலை உயர்வால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெட்ரோல் மீண்டும் ரூ.100ஐ கடந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் தவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். அதேபோல், டீசலும் பெரும்பாலான இடங்களில் ரூ.97ஐ தாண்டி விற்கப்பட்டு வருகிறது. இதனால் கனரக வாகன உரிமையாளர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர். தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலையை கட்டுப்படுத்த, ஒன்றிய பாஜக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், அனைத்து பொருட்களின் விலைவாசியும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கி தவித்து வரும் நிலையில், தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வும் வேதனைக்கு ஆளாக்கியுள்ளது. எனவே, ஒன்றிய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கி தவித்து வரும் நிலையில், தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வும் வேதனைக்கு ஆளாக்கியுள்ளது.