சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தங்கம் விலை உயர்ந்து வருவது நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று மட்டும் சவரனுக்கு ரூ.200 அதிகரித்தது. தங்கம் விலை கடந்த 4 மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில நாட்களில் அதிரடியாக உயர்ந்தும் வந்தது. இந்த நிலையற்ற தன்மையால், அவசரப்பட்டு நகை வாங்கினால், எங்கே மறுநாள் விலை குறைந்து விடுமோ என்ற அச்சமும் மக்களிடையே நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த 7ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.4,408க்கும், சவரன் ரூ.35,264க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,413க்கும், சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு சவரன் ரூ.35,304க்கும் விற்கப்பட்டது.