×

மர்டர் பை ஃபிங்கர் டிப்ஸ்...

நன்றி குங்குமம் தோழி

சில வாரங்களுக்கு முன், சுல்லி என்ற பெயரை சமூக ஊடகங்களில் அதிகம் பார்த்திருப்போம். அவர் தென் கொரியாவைச் சேர்ந்த பாப் பாடகியும் நடிகையும் ஆவார். 25 வயதான சுல்லி, To the beautiful you என்ற தென்கொரிய நாடகத்தில் நடித்து உலகெங்கும் பிரபலமானார்.
மாடல், நடிகை, பாடகர் என்று பன்முக திறமைகளை கொண்ட அவர், அக்டோபர் 14ம் நாள் தன் இல்லத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இவரது திடீர் மரணம், தென்கொரிய மக்களை மட்டும் இல்லாமல், உலகின் பல்வேறு பகுதிகளிலிருக்கும் அவரது ரசிகர் கூட்டத்தையும் மீளா துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

பெண் முன்னேற்றத்திற்காகவும், சமத்துவ சமுதாயத்திற்காகவும் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தவர் இவர். தன்னுடைய காதல் வாழ்க்கையை மீடியாவிலிருந்து மறைக்காமல், வெளிப்படையாகவே வாழ்ந்தவர். பெண்கள் கருக்கலைப்பு உரிமைக்காக போராடி, இணைய தொல்லைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசியவர்.

இப்படி தைரியமாக கருத்துகளை முன்வைத்து வந்ததால், அதிக எதிரிகளை சம்பாதித்தார். அவர்கள் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து சுல்லியை ட்ரால் (troll) செய்து வந்துள்ளனர். பல முறை சுல்லி இதை கண்டுகொள்ளாமல் இருந்தாலும், மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டார்.

இப்படி தொடர்ந்து பல வசை சொற்களால் தாக்கப்பட்டதால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான சுல்லி, ஒரு கட்டத்தில் மன அழுத்த நிலைக்கு சென்றார். ஒரு முறை 6 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ள தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் ஒன்றும் மோசமானவள் இல்லை” என்று கூறி லைவ்வில் அழுதும் உள்ளார். ஆனால் இதையெல்லாம் அவர் விளம்பரத்திற்காக செய்வதாய் கூறி மேலும் அவரை காயப்படுத்தினர்.இவருடைய மரணத்தை ‘Murder by fingertips’ என்று குறிப்பிடுகின்றனர்.

சுல்லி தற்கொலை செய்துகொண்டாலும், அதற்கு காரணம் அடையாளம் இல்லாத பல்லாயிரக்கணக்கான நெட்டிசன்கள்தான். நாம் விமர்சிப்பது உணர்வுகள் நிறைந்த உயிருள்ள நபர் என்பதையே மறந்து, அவர் தொலைக்காட்சிகளிலும் படங்களிலும் வருவதால், அவரை வெறும் ஒரு கதாபாத்திரமாக நினைத்து, மனதை காயப்படுத்தும் விதத்தில் அவரை விமர்சிப்பது, எப்படிப்பட்ட முடிவை  ஏற்படுத்தும்  என்பதற்கு ஒரு உதாரணம் சுல்லிதான்.

‘சுல்லி சட்டம்’ என்ற புது சட்டத்தை ஆன்லைன் வன்முறைக்கு எதிராக கொண்டுவர  பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றது. சைபர் துன்புறுத்தலுக்கு எதிராக குரல் கொடுத்தவரே, அதே காரணத்திற்காக மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டிருப்பது மக்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்திஉள்ளது. பல பிரபலங்கள் தற்போது சமூக வலைத்தலங்களில் தங்களுக்கு ஏற்படும் இந்த மன அழுத்தத்தை வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

சுல்லி சட்டத்தின் முதல் அம்சமாக, ஆன்லைனில் உண்மையான பெயரில் கமென்ட் செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். பலர் தங்களின் அடையாளத்தை மறைத் துதான் இதுபோன்ற கீழ்த்தரமான கமென்டுகளை பதிவிடுகின்றனர். ஆன்லைனில் வன்மத்துடன் நடந்துகொள்ளும் பலரும் நேரில் அதுபோல் இருப்பதில்லை என்றும், உண்மையான அடையாளத்தில் எழுதினால், பலரும் தங்கள் கருத்தை பிறரை புண்படுத்தாத வகையில் எடுத்துரைப்பர் என்று கூறிவருகின்றனர்.

மேலும் தென்கொரியாவின் மீடியாவும், சுல்லி குறித்த அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளை தொடர்ந்து பெரிதாக்கி பூதாகரமாக்கியதையும் குற்றம்சாட்டி உள்ளனர். சுல்லியின் மரணத்தையடுத்து, தென்கொரிய பிரபலங்கள் அனைவரும், இனி ஆன்லைனில் தரக்குறைவாக தங்களை புண்படுத்தும் வகையில் எழுதுவோருக்கு எதிராக புகார் அளிக்கப்படும் என்றும், ஆன்லைன் வன்முறைக்கு மாறாக திரண்டுள்ளனர்.

ஸ்வேதா கண்ணன்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!