நடிப்பு ராட்சசியும், நடன ராட்சசியும்!

நன்றி குங்குமம் தோழி

தீபாவளிக்கு  வெளியான பிகில், கைதி படங்கள் பற்றி பேசப்பட்ட அளவிற்கு, அப்படங்களில் நடித்திருந்த இரு குட்டீஸ்கள் பற்றியும் சேர்த்தே பேசப்பட்டது. பிகில் படத்தில் நடித்திருந்த ப்ரஜுனா சாரா, விஜய்க்கு ஈடுகொடுக்கும் வகையில் தனது நடனத்தினாலும், கைதி

படத்தில் நடித்திருந்த மோனிகா, தனது அளப்பரிய நடிப்பினாலும் அனைவரையும் ஈர்த்தனர்.

‘‘என்னுடைய பெயர் மோனிகா’’ என தன்னை அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பித்தவரை பார்த்து ஆச்சர்யம்தான் வந்தது. காரணம் திரையில் பார்க்கும் போது அவ்வளவு மிரட்டலாக இருந்த மோனிகா நேரில் அப்படி ஒரு சாந்தம். அனிதா, சிவா தம்பதியின் மூத்த மகளான மோனிகாவிற்கு சன் டி.வி யில் ஒளிபரப்பான  ‘குட்டீஸ் சுட்டீஸ்’ தான் முதல் கேமரா அனுபவம். இது குறித்து பகிரும் மோனிகா, “எனக்கு டி.வி பார்க்குறது ரொம்ப பிடிக்கும். அப்படி பார்க்கும் போது குட்டீஸ் சுட்டீஸ் நிகழ்ச்சி ரொம்பவே கவர்ந்தது. அதில் கலந்துக்க கூட்டிட்டு போக சொல்லி அடம் பிடித்தேன்.

அம்மாக்கு என்னை ஒரு டென்னிஸ் பிளேயரா ஆக்க வேண்டுமென்பதுதான் கனவு, ஆசை எல்லாம். சரி பொண்ணு ஆசைப் படுறாளேன்னு கூட்டிட்டுப் போனாங்க. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மட்டுமல்ல, நடிக்கவும் எனக்கு ஆர்வம் இருந்ததையும் அம்மாகிட்ட சொன்னேன். என்னுடைய ஆசையை நிறைவேற்றுவது போலவே அஜித் அங்கிள் கூட ‘வேதாளம்’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் நடிக்க வாய்ப்பு வந்தது. இந்த படம் வந்ததும் ‘சங்கு சக்கரம்’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘பலூன்’ போன்ற படங்களில் வரிசையா நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படங்கள் எல்லாம் பார்த்து விஜய் அங்கிளோட பைரவா படத்தில் நடிக்க கூப்பிட்டாங்க. அவங்க கூட நடிச்சது நல்ல ஒரு எக்ஸ்பீரியன்சா இருந்தது.

ரொம்ப என்கரேஜ் பண்ணாங்க” என்று கூறும் மோனிகா தனது மாறுபட்ட நடிப்பினால் அனைவரையும் கவர்ந்த ‘ஆண் தேவதை’, ‘ராட்சசன்’ படங்களில் நடித்த அனுபவங்களை கூறினார். ‘‘தாமிர அங்கிள் ஆண் தேவதை படம் ஷூட் போகும் போது ஒரு காட்சிக்காக அழுது காட்ட சொன்னாங்க. அங்கிள் ஒரு டூ மினிட்ஸ் டைம் கொடுங்க என்று கேட்டதும், ‘டூ மினிட்ஸ்ல என்ன பண்ணுவன்னு’ கேட்டாங்க. அந்த கேரக்டர் நானா இருந்தா எப்படி இருப்பேன், இல்லாட்டி எனக்கு நடந்த ஏதாவது ஒரு சேட் மூமென்ட் (sad moment) யோசிச்சு பார்த்து அழுகைய கிரியேட் பண்றேன்னு சொன்னதும், ‘இந்த வயதில் உனக்கு என்னம்மா சேடான விஷயம்’ என்று கேட்டாங்க.

சமுத்திரக்கனி அங்கிள்  ரொம்ப கேரிங்கா பாத்துகிட்டாரு. படம் பார்க்கும் போதும் சரி, ஸ்பார்ட்டிலும் சரி ஒரு அப்பா பீல்தான் இருந்தது.

உண்மையான அப்பா போலவே இருந்தாங்க. அதுனாலதான் அந்த படத்துல உண்மையா இருந்திருக்குமோன்னு தோணுது. ராட்சசன் படத்தில் நடித்த அனுபவம் ரொம்பவே சவாலாக இருந்தது. டயலாக் பேசாம, எமோஷனலே கேரி பண்ணனும். ராம் அங்கிள் அதற்கு ரொம்பவே ஹெல்ப் பண்ணாங்க. ஆக்ச்சுலி, ராட்சசன் படம் பார்த்துட்டுதான் லோகேஷ் அங்கிள் கைதி படத்துக்கு என்னை செலக்ட் பண்ணாங்க” என்று கூறும் மோனிகாவிற்கு ரோல் மாடல் நடிகை நயன்தாராவாம்.

ஒரு சில பெரிய நடிகர்களே, தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரத்தை உள் வாங்காமல் நடிப்பதை பார்க்கிறோம். ஆனால், ஒன்பது வயதே ஆன மோனிகா, தனது அசாத்திய நடிப்பினை வெளிப்படுத்தி வருகிறார். “பொதுவா நான் ஷூட்டிங் ஸ்பார்ட்டுக்கு போனா டைரக்டர் அங்கிள்கிட்ட கேட்கும் முதல் கேள்வி மூட் என்னா, அடுத்து சீன், டயலாக். அவங்க சொன்னதும் அதற்காக தயாராகுவேன். அதற்கு முன் அவங்க கிட்டயே எப்படி நடிக்கனும், அந்த கேரக்டர் பற்றி முழுசா கேட்டு தெளிவாகிக்குவேன். அதனால் தான் என்னால் ஓரளவாவது அச்சீவ் பண்ண முடியுதுன்னு நம்பறேன்.

கைதி படத்தோட கிளைமாக்ஸ் ஷூட் பண்ணும் போது, ‘இது ஒரு இம்பார்ட்டன்ட் சீன். நீ சூப்பரா பண்ணிட்டீன்னா செம்மையா ரீச் இருக்கும். பெரிய நேம் கிடைக்கும்’ என்று லோகேஷ் அங்கிள் சொன்னாங்க. அவங்க சொன்ன மாதிரியே அது உண்மையாகவும் ஆனது. அந்த சீன் முடிச்சதும் கார்த்தி அங்கிள் ‘அவள எங்க இருந்து புடுச்சீங்கன்னு’ கேட்டாங்க. ஸ்பார்ட்டுலயே எல்லோரும் அழுதுட்டாங்க” என்று கூறும் மோனிகா எப்போதும் சிங்கிள் டேக் ஆர்டிஸ்ட்டாம்.

“ஷூட்டிங் நேரத்துலயும், படம் பார்த்த பின்பும் நல்லா நடிச்சு இருக்க கண்டிப்பா உனக்கு விருது கிடைக்கும்னு சொல்லுவாங்க. விருதுக்கு என்னுடைய பெயரும் பரிந்துரைப்பாங்க. ஆனால், இது வரை எந்த விருதும் கிடைக்கல. அப்படி என்ன என் நடிப்பில் குறை இருக்கிறது என்று கண்டுபிடித்து அதற்கு தயாராகி அடுத்தடுத்த படங்களில் நடிக்கனும்” என்று நேர்மறையாக கூறுகிறார் மோனிகா. திரைப்படங்களில் நடிப்பதோடு படிப்பிலும் கெட்டிக்காரியாக இருக்கும் மோனிகாவிற்கு, போட்டோ கிராபர், சைன்டிஸ்ட், பாப் சிங்கர், டென்னீஸ் பிளேயர்… போன்ற லட்சியங்களோடு சிறகடித்து பறந்து

கொண்டிருக்கிறார்.   

ப்ரஜுனா

மதுரையை பூர்விகமாகக் கொண்ட ப்ரஜுனா, படு ஆக்டிவா தனக்கே உரிய துறு துறு பொண்ணா பேச ஆரம்பித்தார். ‘‘சின்ன வயசுலேயே ஏதாவது பாட்டு போட்டா அதுக்கு டான்ஸ் ஆடுவேனாம். இதை பார்த்த அப்பா, அம்மா என்னை கொண்டு போய் டான்ஸ் கிளாஸ்ல சேர்த்து விட்டாங்க. அப்ப எனக்கு வயசு மூணுன்னு நினைக்கிறேன். அங்க டான்ஸ் கத்துட்டு இருக்கும் போது ‘கிங் ஆஃப் டான்ஸ்’ நிகழ்ச்சியில் ஆறு ரவுண்ட் வரை கலந்துகிட்டேன். இந்த நிகழ்ச்சியிலேயே நிறைய விஷயங்கள் கத்துக்க முடிஞ்சது. ராஜுசுந்தரம் மாஸ்டர் முன்னாடி எல்லாம் ஆடும்போது

பிரவுடா இருந்தது.

எந்த அளவுக்கு எனக்கு டான்ஸ் பிடிக்குமோ அதே அளவு விஜய் அங்கிளையும் ரொம்ப பிடிக்கும். தனியா யூடியூப் சேனல் என்னோட பேர்ல வச்சு இருக்கேன். அதுல விஜய் அங்கிள், பிரபு மாஸ்டர் மாதிரியெல்லாம் ஆடி போட்டிருக்கேன். அதுலை நிறைய பேர் கமெண்ட்ல வந்து பாராட்டுறது இன்னும் என்கரேஜா இருக்கும்” என்று தனது மழலை மொழியில் பேசும் ப்ரஜுனாவிற்கு பிகில் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது பற்றி கூறினார்.

‘‘ஒரு நாள் அட்லி அங்கிள் ஆபீஸ்ல இருந்து கால் வந்தது. நானும் ஆடிஷன் போனேன். தேர்வும் ஆனேன். அதன் பிறகு தான் விஜய் அங்கிள் கூட தான் நடிக்க போறீங்கன்னு சொன்னாங்க. கேட்டதும் எனக்கு ஆச்சர்யமா இருந்தது. செம்மையான சான்ஸ்னு, எப்ப அவர் கூட நடிக்க போறோம்ன்னு ஒவ்வொரு நாளும் வெய்ட் பண்ணிட்டே இருப்பேன். முதல் நாள் ஷூட்டிங் ஸ்பார்ட்டுக்கு போனதும் அவரை மொத மொத பார்க்கும் போது பதட்டமாவும், அதே சமயம் ஜாலியாவும் இருந்துச்சு. என்னை பார்த்து “ஹாய் ஐ ஆம் விஜய்”னு சொன்னாங்க, நானும் ‘ஐ ஆம் ப்ரஜுனா’னு சொல்லி அறிமுகமாகிட்டோம்.

நாங்க இரண்டு பேரும் ஆடி முடிச்சதுக்கப்பறோம் எல்லாரும் கை தட்டுனாங்க. செம்ம ஹேப்பி. அம்மாகிட்ட விஜய் அங்கிள் சொன்னாங்க, “உங்க பொண்ணு ஷார்ப்பா நல்லா ஆடுறா. டயலாக் எல்லாம் பிக் அப் பண்ணிக்கிறா. பியூச்சர் ஹிரோயின்”னு சொன்னதும் எனக்கு ஷாக் ஆகிருச்சு. ஏன்னா எனக்கு நிறைய ஆம்பிஷன் இருக்கு. டிராவலர், ஓவியர், டான்சர்… இப்ப ஆக்டிங்கும் வருது. ‘ஜடா’, அருள் நிதி சார் கூட ஒரு படம் பண்ண போறேன். சோ என்னா ஆகப் போறேன்னு  பியூச்சர்லதான் தெரியும்” என்றார்.

படங்கள்: அன்னம் அரசு.

Related Stories: