×

இதய நோயை தடுக்க உடற்பயிற்சி செய்வோம்

இந்தியாவில் மொத்த பாதிப்பில் 45 வயதிற்கும் குறைவானவர்கள் மட்டும் 40 சதவீதம் பேர் இரதய பாதிப்பிற்குள்ளாவதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு உணவு பழக்க வழக்கமும் ஒரு காரணம். மாறி வரும் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப அதிகப்படியான மக்கள் ‘‘ஜங்க் புட்’’ எனப்படும் துரித உணவுகளை அதிகம் உண்பதால் இந்த இருதய நோய் அதிக அளவில் ஏற்படுகிறது. பெரும்பாலான மக்கள் சாப்பிடும் உணவு பொருளான அரிசியில் எல்லா சத்துக்களும் நீக்கப்பட்டு பாலீஷ் செய்யப்பட்ட வெறும் ஸ்டார்ச் மட்டுமே உள்ள அரிசியைத்தான் உணவாக உண்கின்றோம். இதை உட்கொள்ளும் மக்களுக்கு பெரும்பான்மையான பிரச்னை என்னவென்றால் உடல் எடை கூடுவது மற்றும் தொப்பையை அதிகப்படுத்துவது ஆகும். இவை அனைத்துமே இதயத்திற்கு எதிரானவை. அதேபோல அதிக கொழுப்புள்ள உணவுகள், சர்க்கரை உணவு பண்டங்கள்,  அதிக உப்புள்ள உணவுகள் ரத்த அழுத்தம், மாரடைப்பை உண்டாக்கும். மாரடைப்பின் அறிகுறிகள்: சில நிமிடங்கள் நீடிக்கும் நெஞ்சின் நடுவில் மெல்லிய வலி, முதுகு, கழுத்து, தாடை அல்லது வயிற்றில் வலி அல்லது அசவுகரியம், மூச்சடைப்பு, குளிர், வியர்வை, குமட்டல், கிறக்கம் என அறிகுறிகள் தென்பட்டால் உடனே இருதய மருத்துவரை நாம் அணுக வேண்டும்.

மேலும் இதயக்குழல் நோயால் ஆண்டுக்கு 1.75 கோடி மக்கள் பலியாகிறார்கள். 2030க்குள் இதய நோயால் 2.3 கோடி மரணங்கள் நிகழலாம் என கணிக்கப்பட்டுள்ளன. வாழ்வியல் நடைமுறையில் இதயம் பெரிதும் பாதிக்கப்படுவது  மன அழுத்தத்தினால் மட்டுமே என்கின்றனர். இதுகுறித்து இருதய நோய் சிகிச்சை நிபுணர்கள் கூறியதாவது :  இன்றுள்ள வாழ்க்கை சூழ்நிலையில் இதயத்தை யாரும் சரியாக பாதுகாப்பது இல்லை. இதனால் மாரடைப்பு இளம் வயதிலேயே ஏற்படுகிறது. ஒரு காலத்தில் 60 வயதுக்கு மேல் ஏற்பட்ட மாரடைப்பு இன்று சராசரியாக 40 வயதில் அனைவருக்கும் வர காரணம் அவர்களுடைய வாழ்க்கை முறை மாற்றம். அதேபோல அவர்களது  உணவு முறை மாற்றமும் முக்கிய பங்களிக்கும். முன்பெல்லாம் விவசாயிகள் எல்லா இடங்களுக்கும்  நடந்து செல்வார்கள். அதைத்தான் நமது முன்னோர்கள், ‘‘நடப்பதெல்லாம் நன்மைக்கே’’ என்று கூறினார்கள். ஒருவர் அதிகாலையில் எழுந்து அரை மணிநேரம் முதல் ஒரு மணிநேரம் வரை நடைபயணம் மேற்கொள்ள வேண்டும். சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க இதய நோய் வர வாய்ப்புகள் அதிகரிக்கும்.

ரசாயனம் கலந்த காய்கறிகள், அரிசி இவைகளை தவிர்த்து இயற்கை முறையில் விளைந்த அரிசி, காய்கறிகளை நம்ம உட்கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் என்பது மிக முக்கியமான ஒன்று. காற்றில்  ஏற்படும் மாசுவினால் நமக்கு அதிகப்படியான இருதய நோய் வர அதிக வாய்ப்புகள் உள்ளது. இதை தடுக்க நாம் ஒவ்வொருவரும் அதிகளவு சைக்கிள்களை பயன்படுத்த வேண்டும். சீனாவில் பெரிய அரசு துறை அதிகாரிகள் உட்பட அனைவரும் சைக்கிளிலேயே தங்கள் அலுவலகத்திற்கு பயன்படுத்துகிறார்கள். அதேபோல ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மறுமுறை பயன்படுத்துவது  தவறானது. அந்த எண்ணெயை திரும்ப திரும்ப பயன்படுத்தும்போது விஷமாக மாறுகிறது. இது இருதயத்திற்கு மிக மிக கெட்ட ஒரு உணவாகும். எனவே இதுபோல எண்ணெய் திரும்ப பயன்படுத்துவதை கைவிட வேண்டும். தற்சமயம் பள்ளி மாணவர்கள்கூட மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுகின்றனர். மன அழுத்தம் என்பது இதயத்தை வெகுவாக பாதிக்கப்படும் ஒரு நோயாகும். தினமும் உடற்பயிற்சியை கண்டிப்பாக அனைவரும் செய்ய வேண்டும் சைக்கிள் ஓட்டுவது, சிறிது தூரம் நடப்பது, ஜாக்கிங் போன்றவற்றை செய்தால் ஓரளவு இதய நோயிலிருந்து நாம் தப்பிக்கலாம். இதய நோயில் இருந்து அனைவரும் தப்பிக்க புகை இல்லா உலகத்தை படைப்போம். மன அழுத்தத்திலிருந்து விடுபடுவோம் என்ற உறுதிமொழியை ஏற்று நடக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Tags : Let’s exercise to prevent heart disease
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...