இந்தியா மட்டுமின்றி உலகிற்கே அச்சுறுத்தல் 12 தீவிரவாத குழுக்களின் தாயகம் பாக்.: அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வறிக்கையில் தகவல்

வாஷிங்டன்: இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் 12 தீவிரவாத அமைப்புகளின் தாயகமாக பாகிஸ்தான் இருப்பதாகவும், தற்போதும் தீவிரவாத அமைப்புகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்வதாகவும் அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் குறித்து அமெரிக்க நாடாளுமன்றம் ஆய்வு செய்து, எம்பிக்களுக்கு அறிக்கையை சமர்பித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்க சட்டப்படி, ‘வெளிநாட்டு தீவிரவாத குழுக்கள்’ என தடை செய்யப்பட்ட 12 அமைப்புகளின் புகலிடமாகவும், தாயகமாகவும் பாகிஸ்தான் இருந்து வருகிறது.

இந்த அமைப்புகளில் பெரும்பாலானவை 1980ம் ஆண்டில் இருந்து செயல்படுபவை. இவைகளில் முக்கிய தீவிரவாத குழுக்கள் இந்தியா மற்றும் காஷ்மீரை குறிவைத்து செயல்படுகின்றன. கடந்த 1980ல் உருவான லஷ்கர் இ தொய்பா அமைப்பு, மும்பையில் 2008ல் நடந்த பயங்கர தாக்குதல் நடத்த காரணமானது. மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது அமைப்பு, லஷ்கர் இ தொய்பாவுடன் சேர்ந்து2001ல் இந்திய நாடாளுமன்றத்திலும் தாக்குதல் நடத்தியது. 1980ல் சோவியத் ராணுவத்தை எதிர்த்து ஆப்கானில் போராட ஹர்கத் உல் ஜிகாத் அமைப்பு உருவானது அதன்பின் இதுவும் இந்தியாவுக்கு எதிராக திரும்பியது. இந்த அமைப்பு ஆப்கான் தலிபான்களுக்கும் வீரர்களை வழங்கி வருகிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எந்தெந்த அமைப்புகள்

* லஷ்கர் இ தொய்பா

* ஜெய்ஷ் இ முகமது

* ஹரகத் உல் ஜிகாத்

* ஹிஸ்புல் முஜாகிதீன்

* அல்கொய்தா

* ஐஎஸ்கேபி

* தலிபான்களின் ஹக்கானி நெட்வொர்க்

* தெஹ்ரிக் இ தலிபான் பாக்.

* பலுசிஸ்தான் லிபரேஷன் ஆர்மி

* ஜூன்தல்லா

* சிபா இ சபாபா பாக்.

* லஷ்கர் இ ஜாங்வி

இவை தவிர அமெரிக்காவால் தடை செய்யப்படாத பல தீவிரவாத அமைப்புகளும் பாகிஸ்தானில் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* ஐநா நம்பிக்கை

சமீபத்தில் ஐநா பொதுச் சபையில் காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியதற்கு இந்திய பிரதிநிதி சரமாரி பதிலடி கொடுத்தார். இதனால், ஐநாவில் இந்தியா-பாகிஸ்தான் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இது குறித்து ஐநா பொதுச் செயலாளர் கட்டரசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபனி டிஜாரிக் அளித்த பேட்டியில், ‘‘இந்தியா, பாகிஸ்தானின் பேச்சுக்களை ஐநாவும் கேட்டுள்ளது. ஆனாலும் இரு நாடுகளும் மீண்டும் அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் என நாங்கள் நம்புகிறோம்,’’ என்றார்.

* இம்ரானுடன் பைடன் எப்போது பேசுவார்?

அமெரிக்க அதிபராக பைடன் கடந்த ஜனவரியில் பதவியேற்றதில் இருந்து இதுவரை பாகிஸ்தான் பிரதமர் இம்ரானுடன் தொலைபேசியில் ஒருமுறை கூட பேசியதில்லை. பிரதமர் மோடி, பைடனுடன் நேரில் சந்தித்த பிறகு இந்த விவகாரம் மீண்டும் எழுப்பப்பட்டுள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் ஜென் பெஸ்கி கூறுகையில், ‘‘எல்லா நாட்டு தலைவர்களுடனும் ஒரே நேரத்தில் பைடனால் பேச முடியாது. பைடன் எப்போது இம்ரானுடன் தொலைபேசியில் பேசுவார் என்பதை நாங்கள் கணிக்க முடியாது. சரியான நேரத்தில் உத்தரவு வரும் போது அதற்கான ஏற்பாடுகளை செய்வோம்,’’ என்றார்.

Related Stories: