திருமலை: ஏழுமலையானை தரிசிக்க ஹெலிகாப்டரில் அழைத்து செல்வதாக விளம்பரம் செய்த தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையை சேர்ந்த வாசிவி யாத்திரா என்னும் டிராவல்ஸ் நிறுவனம் சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூரில் இருந்து திருப்பதிக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்து வருவதற்கும், 5 நட்சத்திர ஓட்டலில் தங்குவதற்கு உணவு, ஏழுமலையான் கோயில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் விஐபி தரிசனம் செய்து வைப்பதாகவும், இதற்கு ரூ.1,11,116 செலவாகும் என சமூக வலைதளத்தில் அதிகளவில் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அவர்களின் சிபாரிசு கடிதங்களுக்கு மட்டுமே விஐபி தரிசனம் வழங்கப்படுகிறது. எனவே, இதுபோன்ற அறிக்கைகளை நம்ப வேண்டாம். பக்தர்களை ஏமாற்றும் விதமாக விளம்பரம் செய்து வரும் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தானம் எச்சரித்துள்ளது.