புதுடெல்லி: பருவநிலை மாற்றங்களை தாங்கி அதிக மகசூல் தரக்கூடிய, ஊட்டச்சத்து குறைபாடுகள் நீக்கப்பட்ட 35 பயிர் வகைகள் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலால் (ஐசிஏஆர்) உருவாக்கப்பட்டுள்ளன. சிறப்பு பண்புகளைக் கொண்ட இவற்றை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த பட்டியலில் வறட்சியை தாங்கும் கொண்டைக் கடலை வகைகள், பிஜியன் கடலை, விரைவில் மகசூல் அளிக்கும் சோயாபீன், நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட அரிசி, கோதுமையை போல் நேரடியாக நிலத்தில் விதைத்தால் விளையும் நெல் விதை, செரிவூட்டப்பட்ட கோதுமை வகைகள், முத்து தினை, மக்காச் சோளம் போன்றவை உள்ளன.