சென்னை: பணி நிரந்தரம் செய்யக்கோரி 800க்கும் மேற்பட்ட கொரோனா எம்.ஆர்.பி செவிலியர்கள் சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில், நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்ததை தொடர்ந்து, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கூடுதலாக செவிலியர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தமிழக அரசு நியமித்தது. அந்தவகையில் 2019ம் ஆண்டு மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தின் (எம்.ஆர்.பி) மூலம் நடத்தப்பட்ட தேர்வு மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் கொரோனா சிகிச்சைக்காக ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியில் நியமிக்கப்பட்டனர்.
அவ்வாறு பணியில் சேர்க்கப்பட்ட செவிலியர்களுக்கு மாத ஊதியம் 14 ஆயிரத்துடன் தங்கும் இடம், உணவு இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது சில மருத்துவமனைகளில் பணிபுரியும் கொரோனா எம்.ஆர்.பி செவிலியர்களுக்கு உணவு, தங்கும் இடம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல், கொரோனா பணிக்காக நியமிக்கப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பணியமர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு செவிலியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நேற்று தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த 800க்கும் மேற்பட்ட செவிலியர்கள் சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 5 பேர் மயக்கம் அடைந்தனர்