×

தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதியில் இருந்து 1 முதல் 8ம் வகுப்புக்கு பள்ளிகள் திறப்பு: வழிபாட்டு தலங்களுக்கு கட்டுப்பாடு தொடரும்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதியில் இருந்து 1 முதல்  8ம் வகுப்புகள் செயல்படும். பொதுமக்கள், விவசாயிகள் குறைதீர்வு நாள் நடத்த அனுமதி அளிக்கப்படும். மேலும், திருவிழாக்கள், சமுதாயம், அரசியல், கலாசார நிகழ்வுகள், வழிபாட்டு தலங்களுக்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், பல்வேறு கட்டுப்பாடு மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் நலன் கருதி, அதிகப்படியான பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளான திருவிழாக்கள், அரசியல், சமூகம், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தற்போது உள்ள தடை அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  அப்போது, 9, 10, 11, 12ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் சுழற்சி முறையில் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இந்தநிலையில் கொரோனா நோய் கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமை செயலாளர் இறையன்பு, தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பள்ளிகல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, அறநிலைய துறை செயலாளர் சந்திரமோகன், பொது துறை செயலாளர் ஜெகன்நாதன், பேரிடர் மேலாண்மை துறை இயக்குனர் சுப்பையன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கொண்டனர். இந்தநிலையில், தமிழகத்தில் 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதன் காரணமாக, கொரோனா நோய்த் தொற்று பரவக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டும், நோய்த் தொற்று பரவலைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் 31.10.2021 காலை 6 மணி வரை தொடர்ந்து அமலில் இருக்கும். சமுதாயம், அரசியல், கலாசார நிகழ்வுகள், திருவிழாக்கள், குடமுழுக்கு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

நோய்த்தொற்று பரவாமல் இருக்க பெருமளவில் மக்கள் ஒன்று கூடக்கூடிய நாட்களாகிய வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். மேலும், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள், விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும். பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் நடத்த அனுமதி: பொதுமக்கள், தங்களது குறைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, பல்வேறு மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வருகை புரிந்து தலைமைச் செயலகத்தில் தங்களது கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்து வருகின்றனர், பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் நோக்குடன், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில், திங்கட்கிழமை தோறும், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள், மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் ஆகியவற்றை கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது. மேலும், மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களின் ஆலோசனையின்படி 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ- மாணவியருக்காக பள்ளிகளும் மற்றும் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.

அதேபோல், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர், பள்ளி செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் தெரிவித்ததைக் கருத்தில் கொண்டு, அனைத்து பள்ளிகளிலும், 1ம் வகுப்பு முதல்  8ம் வகுப்பு மாணவ மாணவியருக்கான வகுப்புகள், கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 1.11.2021 முதல் நடத்த அனுமதிக்கப்படும். அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும்.

இதேபோல், மாவட்ட ஆட்சியர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் சிறப்பு தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். கடைகளிலும், பொது மக்கள் கூடக்கூடிய இடங்களிலும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.  கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அனைத்து கடைகளும், குளிர் சாதன வசதி இல்லாமல் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.  கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

நோய்த் தொற்று கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்:

* நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

* நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர,  இதர செயல்பாடுகள் அனுமதி இல்லை. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், தீவிரமாக நோய்த் தொற்று பரவலை, வீடு வீடாக கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும். கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடு நடைமுறைகள் தொடர்ந்து  கண்காணிக்கப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும்.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருக்குமாறும், கூட்டம் கூடக்கூடிய இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், உரிய  கட்டுப்பாடுகளால் மட்டுமே கொரோனா 3வது அலையை தவிர்க்க இயலும் என்பதை உணர்ந்து அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.   அனைத்து வணிக நிறுவனங்களும் கட்டுப்பாட்டு விதிமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,Chief Minister ,MK Stalin , Opening of schools for 1st to 8th class in Tamil Nadu from November 1: Restriction on places of worship will continue! Announcement by Chief Minister MK Stalin
× RELATED தமிழ்நாட்டை மொழி, இனம், பண்பாட்டு...