சென்னை: எளிய மக்களுக்கும் அதிகாரம் என்பதே எங்கள் கொள்கை என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார். தென் சென்னை கிழக்கு மாவட்டம், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக தமிழர் எழுச்சி நாள் மற்றும் சமூகநீதி சமூகங்களின் ஒற்றுமை கருத்தரங்கம் ஆதம்பாக்கத்தில் நடந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுபவீரபாண்டியன், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, செந்தில்வேலன் சிறப்புரையாற்றினர்.
திருமாவளவன் பேசும்போது, ‘‘மார்க்சிசம், பெரியாரிசம், அம்பேத்கரிசம் போன்றவற்றின் ஒரே இலக்கு சமத்துவம்தான். அகில இந்திய அளவில் சாதி ஒழிப்பு, மகளிர் விடுதலை உள்ளிட்ட கொள்கைகளை கொண்ட ஒரே கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. அதனால்தான் சனாதனத்தை கடுமையாக எதிர்க்கிறோம். அடிதட்டு மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என்பதுதான் விடுதலை சிறுத்தையின் கொள்கை. இந்த சமூகநீதியை அழித்தொழிக்க கங்கணம் கட்டி திரிகிறார்கள் சனாதனவாதிகள். எஸ்சி, ஓபிசி என்ற பெயரில் தனித்தனியாக இணைந்தால் மதவாதிகள் நம்மை பிளவுபடுத்தி விடுவார்கள், சமூகநீதி சமூகங்களின் ஒற்றுமை என்ற புள்ளியில் நாம் ஒன்றுபட வேண்டும். இந்த கருத்தரங்கில் ஊஞ்சை அரசன், பாவரசு, வன்னியரசு, எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ., பனையூர்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.