சென்னையில் வருகிற 11, 12ம் தேதி குரூப் 4 பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் வருகிற 11, 12ம் தேதி குரூப் 4 பதவிக்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு கலந்தாய்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) செயலாளர் பி.உமா மகேஸ்வரி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 4 பதவியில் அடங்கிய(2018-2019 மற்றும் 2019-2020 ஆண்டுக்கானது) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு எழுத்துத்தேர்வு கடந்த 1.9.2019 அன்று நடத்தப்பட்டது. எழுத்துத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் 12.11.2019 அன்று வெளியிடப்பட்டது.

இத்தேர்வு தொடர்பான இரண்டாம் கட்ட மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை பிராட்வேயில் உள்ள தேர்வாணைய தலைமை அலுவலகத்தில் இளநிலை உதவியாளர், நில அளவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கு வருகிற 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீட்டு விதி மற்றும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய ‘‘அழைப்புக்கடிதத்தினை” தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Related Stories: