எங்க ஏரியாவில் ரோந்து வந்தால் ‘போட்டு தள்ளிவிடுவேன்’தனியாக இருந்த போலீசை மிரட்டிய ரவுடி அதிரடி கைது

சென்னை: சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் கடந்த 26ம் தேதி இரவு பணியில் இருந்த போலீசார் ரோந்து பணிக்கு சென்றுவிட்டனர். காவல் நிலையத்தில் பாரா காவலர் சதீஷ்குமார் என்பவர் மட்டும் தனியாக பணியில் இருந்தார். இரவு 10 மணி அளவில் அபிராமபுரம் காவல் நிலையத்தின் முன்பு போதை ஆசாமி ஒருவர் வந்தார். அப்போது காவல் நிலையத்தில் யார் இருக்கிங்க.... எங்க எரியாவில் யாராவது ரோந்து வந்தால் பிளேடால் போட்டு தள்ளிவிடுவேன் என்று கையில் பிளேடு வைத்து கொண்டு ஆபாச வார்த்தைகளை கூறி மிரட்டியுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத பாரா பணியில் இருந்த காவலர் சதீஷ் குமார் போதை ஆசாமியை வெளியே செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனாலும் போதை ஆசாமி கையில் எலுமிச்சை பழத்தை சுவைத்து கொண்டு எந்த பதற்றமும் இல்லாமல் தொடர்ந்து எச்சரித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த அபிராமபுரம் இன்ஸ்பெக்டர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அதில், பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய அபிராமபுரத்தை சேர்ந்த கார்த்திக்(எ)பிச்சைகார்த்திக்(27) என்று தெரியவந்தது. அபிராமபுரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது, 5க்கும் மேற்பட்ட அடிதடி மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காவல் நிலையத்தின் கண்ணாடியை உடைத்ததாக கைது செய்யப்பட்டது தெரியவந்தது. அதைதொடர்ந்து ரவுடி பிச்சை கார்த்திக்கை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Related Stories: