பொய்கை மாட்டு சந்தையில் மாடுகள் விற்பனை மந்தம்: விவசாயிகள் ஏமாற்றம்

வேலூர்: வேலூர் பொய்கை மாட்டுச்சந்தையில் வழக்கம்போல் இன்றும் மாடுகள் விற்பனை மந்தமாக இருந்தது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். தமிழகத்தில் நடைபெறும் கால்நடை சந்தைகளில் பொய்கை மாட்டுச்சந்தை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் கறவை மாடுகள், காளைகள், எருமைகள், மற்றும் ஆடு, கோழிகள் அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதனால் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும்.

கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த 4 மாதங்கள் பொய்ைக மாட்டுச்சந்தைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வை தொடர்ந்து மாட்டுச்சந்தை நடத்த அனுமதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 4 வாரங்களாக சந்தை நடந்து வருகிறது. ஆனால் கால்நடைகள் விற்பனை மந்தமாக இருந்தது. இந்நிலையில் இன்றுகாலை வழக்கம்போல் பொய்கை மாட்டுச்சந்தை செயல்பட்டது. வழக்கத்தை விட மாடுகள் குறைவாக இருந்தது. பெரும்பாலான வியாபாரிகள், விவசாயிகள் கால்நடைகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் வழக்கம்போல் இன்றும் விற்பனை மந்தமாகவே இருந்தது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.  

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘கொரோனா பரவல் காரணமாக பொய்கை மாட்டு சந்தை விற்பனை மந்தமாக உள்ளது. கொரோனா தொற்று குறித்த அச்சம் குறைந்தால் மட்டுமே பொய்கை சந்தையில் விற்பனை களைகட்டும். பொங்கல் பண்டிகைக்கு பிறகே பொய்கை மாட்டு சந்தை மீண்டும் பழைய நிலைக்கு வர வாய்ப்பு உள்ளது’ என்றனர்.

Related Stories: