திருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவி பாலியல் பலாத்காரம்: கல்லூரி மாணவர் மீது வழக்கு

குளச்சல்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே திருமணம் செய்வதாக கூறி  மாணவியை பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் மீது மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே தேரூர் புதுக்கிராமம் காலனியை சேர்ந்தவர் ராம் நரேஷ்குமார் (20). நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். பிளஸ் டூ படிக்கும் போது, அதே பள்ளியில் படித்த ஒரு கிராமத்தை சேர்ந்த பிளஸ் 1 படித்த 18 வயது நிரம்பாத ஒரு மாணவியை பின் தொடர்ந்து காதல் வலை வீசினார். பின்னர் கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி மாணவியின் வீட்டுக்கு சென்றார்.

அப்போது மாணவியின் வீட்டில் யாரும் இல்லை. இதை தெரிந்து கொண்டவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசை வார்த்தைக் கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து 4 முறை மாணவியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதை மாணவியின் தாய் கண்டு பிடித்தார். உடனே மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். இதையடுத்து மருத்துவமனையில் மாணவிக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்த பரிசோதனையில் மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதை கேட்டு மாணவியின் தாய் அதிர்ச்சியடைந்தார்.

அதைத் தொடர்ந்து மாணவியிடம் விசாரணை நடத்தினார். அப்போது கர்ப்பத்திற்கு காரணம் ராம் நரேஷ்குமார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து மாணவி உடனே குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி, கல்லூரி மாணவர் ராம் நரேஷ்குமார் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தார். இந்த தகவல் அறிந்ததும் மாணவர் தலைமறைவாகிவிட்டார். தொடர்ந்து மகளிர் போலீசார் மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: