சாவிலும் இணை பிரியா தம்பதி

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா கை.களத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிறுநிலா கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி(76). இவரது மனைவி ராமாயி(75). இவர்கள் மகன் மணிகண்டன் வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் திருமணம் ஆனது முதல் 50 ஆண்டுகளுக்கு மேலாக எங்கு சென்றாலும் இணை பிரியாமல் ஒன்றாக செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த மே மாதம் 18ம்தேதி ராமசாமி உடல்நலம் குன்றி படுத்தபடுக்கையானார். இதேபோல் ராமாயியும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்து காயமடைந்ததால் உடல்நலம் குன்றி இருந்தார். கடந்த ஒரு மாதமாக இருவரும் எழுந்து நடமாடமுடியாமல் இருந்தனர்.

இதனிடையே கடந்த சனிக்கிழமை இரவு 8 மணிக்கு ராமசாமி இறந்தார். கணவன் இறந்தது தெரியாமல் ராமாயி நினைவின்றி படுத்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை ராமசாமிக்கு இறுதிச்சடங்கு நடைபெற தொடங்கியது. அப்போது கணவர் இறந்துவிட்டார் என அறிந்த சில நிமிடங்களில் ராமாயியும் இறந்தார்.  பின்னர் ராமசாமி, ராமாயி இருவரது சடலமும் மயானத்திற்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு ஒரே குழிக்குள் அடக்கம் செய்யப்பட்டது.

Related Stories: