201 நாட்களுக்கு பின் சரிந்த கொரோனா பாதிப்பு: 5வது முறையாக 1 கோடியை தாண்டிய தடுப்பூசி

புதுடெல்லி: நாடு முழுவதும் 201 நாட்களுக்கு பின்னர் முதன்முறையாக கொரோனா பாதிப்பு சரிந்துள்ளது. ஐந்தாவது முறையாக தினசரி தடுப்பூசி போடும் திட்டத்தில் ஒரு கோடி டோசுக்கு மேல் நேற்று போடப்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ‘நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 18,795 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 201 நாட்களுக்கு பிறகு 20,000க்கும் குறைவாக சரிந்துள்ளது.

இதுவரை நாடு முழுவதும் 3,36,97,581 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 179 நோயாளிகள் தொற்றால் இறந்தனர். மொத்த இறப்பு எண்ணிக்கை 4,47,373 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 32,958,002 ஆகவும். கடந்த 24 மணி நேரத்தில் 26,030 பேரும் குணமடைந்துள்ளனர். தற்போது 2,92,206 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 11,699 பேருக்கு புதியதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நேற்று மட்டும் 13,21,780 ெகாரோனா மாதிரி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை 56,57,30,031 மாதிரி பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1,02,22,525 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளன. தடுப்பூசி திட்டம் தொடங்கியதில் இருந்து தற்போது ஐந்தாவது முறையாக தினசரி தடுப்பூசியில் ஒரு கோடியை தாண்டியுள்ளது. இதுவரை போடப்பட்ட மொத்த தடுப்பூசி எண்ணிக்கை 87,07,08,636 ஆக உயர்ந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

Related Stories: