ஆப்கான் தலைநகர் காபூலில் கடும் தண்ணீர் பஞ்சம்!: கிணறு, அடி பம்புகளில் தண்ணீர் எடுக்க பல மணி நேரம் காத்துக்கிடக்கும் அவலம்..!!

காபூல்: ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூல் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் ஆட்சி நிர்வாகத்தை தாலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். 20 ஆண்டுகளாக முகாமிட்டு இருந்த அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறி விட்டன. தாலிபான்கள் அமைக்கும் அரசு எப்படிப்பட்டதாக இருக்குமோ என்று ஆப்கானிஸ்தான் மக்கள் கவலைப்படுகிறார்கள். மக்களின் கவலைகளை மேலும் அதிகரிக்கும் வகையில், அங்கு உணவு பஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது. கடைகளுக்கு பொருட்கள் வரத்து இருந்தாலும், விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இதற்கிடையே ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. பருவநிலை மாற்றம், மோசமான நீர் மேலாண்மை காரணமாக காபூல் நகரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கிணறுகளிலும், அடி பம்புகளிலும் இருந்து தண்ணீர் எடுக்க பொதுமக்கள், பாத்திரங்களுடன் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், நகரமே வறண்டுவிடுமோ என்ற அச்சம் தற்போது எழுந்திருப்பதாகவும் காபூல் நகர மேயர் அம்துல்லா நோமானி கவலை தெரிவித்திருக்கிறார். இந்த தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க குடிநீர் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் காபூல் நகர மேயர் தெரிவித்திருக்கிறார்.

Related Stories: