வந்தவாசி அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

வந்தவாசி : வந்தவாசி அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான குத்துக்கல் மற்றும் கல்வெட்டு ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வெடால் கிராமத்தில் உள்ள பாறை ஒன்றில் கல்வெட்டு இருப்பதாக வந்த தகவலின்பேரில் திருவண்ணாமலை மரபுசார் அமைப்பை சேர்ந்த ராஜ் பன்னீர்செல்வம், உதயராஜா, சரவணன் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:  

வெடால் கிராமத்தின் மேற்கு மலையடிவாரத்தில் உள்ள குளத்தின் ஓரம் பெரிய பாறையின் மீது 13 வரிகளில் கல்வெட்டு ஒன்று மிகவும் தேய்ந்த நிலையில் உள்ளது. அதனை சுத்தம் செய்து ஆய்வு செய்ததில் அந்த கல்வெட்டு பிற்கால பல்லவ மன்னன் முதலாம் கோப்பெருஞ்சிங்கனின் காலத்தை சேர்ந்தது (கி.மு.1216-1242) என்பது தெரியவருகிறது.  

ஸ்வத அவனி ஆளப்பிறந்தான் என்ற மெய்கீர்த்தியுடன் தொடங்கும் இந்த கல்வெட்டு பெரும்பான்மை நேரம் நீரில் மூழ்கி இருப்பதால் சிதைந்து காணப்படுகிறது. இருப்பினும் அதில் கிடைத்த தகவலை வைத்து அது பாடல் கல்வெட்டு என்பதை அறிய முடிகிறது. இந்த கல்வெட்டில் கோப்பெருஞ்சிங்கனை ‘காடவராய மகனார்’ என்றும், தொண்டை நாட்டை கைப்பற்றி ஆட்சி செய்தமையை தொண்டை நாடு கொண்ட பல்லவாண்டராயன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வெண்குல தொண்டரைய குலவேந்தன், திசை பூவன காடவராயன், செங்கோற்காடவன், கனலெழியராயன் என்றும் கோப்பெருஞ்சிங்கனை சிறப்பித்து கூறப்பட்டுள்ளது.  

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே வயலூர், அத்தி போன்ற ஊர்களில் இதுபோன்ற பாடல் வடிவிலான கோப்பெருஞ்சிங்கனின் கல்வெட்டு ஆவணம் செய்யப்பட்டது.

இந்தநிலையில், இந்த கல்வெட்டு கோப்பெருஞ்சிங்கனின் தமிழ் பற்றை பறைசாற்றும் மற்றும் ஒரு  கல்வெட்டு என கூறலாம். மேலும் இந்த இடத்தை ஒட்டிய மலைப்பகுதியின் அடிவாரத்தில் ஆய்வு செய்ததில், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல்  பழமையான குத்துக்கல் ஒன்று உள்ளது தெரியவந்தது. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இனக்குழுவில் இறந்தவர் நினைவாக குத்துக்கல் வைத்து வழிபடும் வழக்கம் இருந்தது. இன்றும் பல ஊர்களில் குத்துக்கல் மூத்தோர் வழிபாட்டு முறையின் அங்கமாக உள்ளது. இங்கே காணப்படும் குத்துக்கல்லின் முனையில் சிறிய வட்டவடிவிலான பகுதி தேய்ந்து பள்ளமாக காணப்படுகிறது.

மேலும், சங்கம் மற்றும் சங்கம் மருவிய காலத்தில் வேட்டைக்கும், போருக்கும் செல்லும் முன் தங்கள் ஆயுதங்களை இதுபோன்று வழிபடும் குத்துக்கல்லின் மீது தேய்த்து எடுத்து சென்றால் அக்காரியம் வெற்றி அடையும் என்ற நம்பிக்கை மக்களிடையே இருந்தது. அதுபோல் இந்த குத்துக்கல்லில் ஆயுதங்களை தீட்டியதால் அக்குழி ஏற்பட்டு இருக்கலாம்.

இந்த குத்துக்கல் அருகே கல்வட்டம் ஒன்றும் பாதி சிதைந்த நிலையில் உள்ளது. இதன் மூலம் இந்த இடத்தின் தொன்மை சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்டது என்பதை அறியலாம். மேலும் குத்துக்கல் கண்டறியப்பட்ட இடத்தை ஒட்டிய பகுதிகளில் ஆங்காங்கே பானை ஓடுகள் கிடைக்கப் பெறுகிறது. எனவே இந்த இடத்தை மேலும் ஆய்வு செய்தால் புதிய தகவல்கள் கிடைக்கக்கூடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: