சுரண்டை அருகே பச்சிளம் குழந்தை உடல் குளத்தில் வீச்சு

சுரண்டை : சுரண்டை அருகே உள்ள இடையர்தவணை கீழகுளத்தில் நேற்று காலை பிறந்த ஆண் குழந்தை உடல் கிடப்பதாக சுரண்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுரண்டை இன்ஸ்பெக்டர் சுரேஷ், எஸ்.ஐ.விமலா மற்றும் போலீசார் விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் அந்த குழந்தை இருந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கணவனை இழந்த பெண் ஒருவருக்கு அந்த குழந்தை பிறந்தது தெரியவந்தது.

தவறான பழக்கத்தால் அந்த பெண் கருவுற்ற நிலையில் நேற்று அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தை இறந்தே பிறந்ததால் உடலை குளத்தில் வீசியதாக அந்த பெண் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சுரண்டை போலீசார் குழந்தையை பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பரிசோதனை முடிவில் குழந்தை இறந்தே பிறந்ததா? அல்லது கழுத்து நெரித்து கொன்று உடல் வீசப்பட்டதா? என்பது தெரியவரும்.

Related Stories: