கோ-ஆப்டெக்ஸ் நிறுவன ஊழியர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் விற்பனையகங்களில் பல ஆண்டுகளாக இரவு 8 மணி வரை இருந்த பணி நேரம் தற்போது இரவு 9 மணி என மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் பெண் ஊழியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகபுகார்கள் எழுந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் பல விற்பனையகங்களில் கழிப்பிட வசதிகள் இல்லை என்றும், தற்காலிக ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், சில அதிகாரிகள் பெண் ஊழியர்களிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும், விற்பனையில் சரிவை ஏற்படுத்தும் செயல்கள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

 இதற்கு தீர்வு காணும் வகையில் அக்டோபர் 5ம்தேதி கோ-ஆப்டெக்சின் தலைமையகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாகவும், அதற்கும் தீர்வு காணப்படவில்லை என்றால் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்றும் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அவர்களின் நியாயமான கோரிக்கைக்கு தீர்வு ஏற்படுத்தி அவர்களின் போராட்ட அறிவிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.  எனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுடைய பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் விரைந்து தீர்வு காண அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும்.

Related Stories: