காங்கிரஸ் உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்களை பாஜ அரசு விற்கிறது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை:  தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில், ‘2024ல் புதிய அரசியல் படைப்போம்’ என்ற தலைப்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் சென்னை சைதாப்பேட்டை ஐந்து விளக்கு பகுதியில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எம்.ஏ.முத்தழகன் தலைமை வகித்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, வீடுதோறும் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கையை தொடக்கி வைத்து பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஏற்றத்துக்கு என்ன காரணம். பெண்கள் அதிகமாக பயன்படுத்த கூடிய எரிவாயு விலை உயர்வுக்கான காரணத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சி செய்த போது, கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 108 அமெரிக்க டாலராக இருந்தபோது, பெட்ரோல் விலை 70 ருபாய்க்கு கொடுத்தது. இப்போது கச்சா எண்ணெயின் விலை 50 டாலரில் இருந்து 60ஆகதான் உள்ளது. ஆனால் மோடி அரசால் 100 ரூபாய்க்கு பெட்ரோல் விற்கப்படுகிறதது.

பாஜ அரசின் மோசமான ஆட்சி இது. இன்றைக்கு நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன், தவறான புள்ளி விவரங்களை வழங்குகிறார். 25 லட்சம் கோடிக்கு வரியை உயர்த்தி இருக்கிறார். இதை பொதுமக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.நேரு இந்த தேசத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று பொய்யுரை வழங்குகிறார்கள். பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியவர் நேரு. அவரால் தான் ஆயுள் காப்பீட்டு கழகம் உருவாக்கப்பட்டது. அப்போது ரூ.5 கோடி முதலீடு செய்யப்பட்டது. இது இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு உதவுகிறது.

இன்றைக்கு மோடி என்ன செய்கிறார். இந்த பொதுப்பணி துறைகளை விற்றுக் கொண்டிருக்கிறார். ரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை விற்க பார்க்கிறார்கள். இதை தடுக்க காங்கிரஸ் கட்சியினர் வேகமாக செயல்பட்டு மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், அகில இந்திய செயலாளர்கள் ஸ்ரீவல்லபிரசாத். சி.டி.மெய்யப்பன், மாநில ஊடக தலைவர் கோபண்ணா, அசன் மவுலானா எம்எல்ஏ, பொன் கிருஷ்ணமூர்த்தி, ராமசுகந்தன், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், டில்லிபாபு, எம்.பி.ரஞ்சன்குமார், நாஞ்சில் பிரசாத், சிவ ராஜசேகரன், அடையார் துரை மற்றும் டாக்டர் கே.விஜயன், தி.நகர் இல.பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: