வீட்டை உடைத்து 110 சவரன், பணம் கொள்ளை

மதுராந்தகம்:செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (45). தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர். நேற்று முன்தினம் மாலை கார்த்திகேயன், குடும்பத்துடன் அச்சிறுப்பாக்கம் அருகே விளாங்காட்டில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த 110 சவரன் நகை, 85 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

இதுகுறித்து கார்த்திகேயன், அச்சிறுபாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும், கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

உத்திரமேரூர்: உத்திரமேரூர் பேரூராட்சி செங்குந்த பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் கோட்டம்மாள் (70). இவரது வீட்டின் பின்புறம் ஒரு போர்ஷன் காலியாக உள்ளது. இதனால், வாடகைக்கு விடப்படும் என வீட்டின் வெளியே பலகை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை அங்கு ஒரு வாலிபர் வந்தார். வீட்டை பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். அப்போது திடீரென அந்த வாலிபர், கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த 4 சவரன் வளையல்களை பறித்து கொண்டு தப்பினார். புகாரின்படி உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: