ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து மூலப்பொருள், கழிவுகளை எடுக்க அனுமதிக்க முடியாது !: வேதாந்தா கோரிக்கையை எதிர்க்கும் தமிழக அரசு..!!

மதுரை: ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து மூலப்பொருள், கழிவுகளை எடுக்க அனுமதி தர தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமாக ஸ்டெர்லைட்  காப்பர் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்திற்கு எதிராக மக்களின் மாபெரும் போராட்டத்தை தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவின் பேரில் ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமெடுத்ததால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அவசர கால ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. கடந்த ஏப்ரல் மாதம் 27-ம் தேதியோடு அனுமதி முடிவடைந்து ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இதையடுத்து வேதாந்தா நிறுவனம் சார்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஸ்டெர்லைட் ஆலையில் சக்திவாய்ந்த நச்சு பொருட்கள், ரசாயனம், ஆசிட் மற்றும் ஆபத்தான மூலப்பொருட்கள் அனைத்தும் அப்படியே உள்ளது. குறிப்பாக ஆக்சிஜன் தயாரிப்பின் போது பயன்படுத்தப்பட்ட எண்ணெய் கழிவுகளும் அவ்வாறே உள்ளது. எனவே உரிய கால அவகாசத்துடன் இந்த மூலப்பொருள் கழிவுகளை அகற்றி கொள்வதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி துரைசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பாக வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி பதில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், ஆலையில் உள்ள மூலப்பொருட்களை ஆராய அமைக்கப்பட்ட குழு, அவற்றை அகற்ற பரிந்துரைக்கவில்லை. ஆலையில் இருந்து மூலப்பொருள், கழிவுகளை அகற்ற மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் பரிந்துரைக்கவில்லை. இந்த பிரதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மூலப்பொருளை அகற்ற அனுமதி தர இயலாது என்று தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அரசின் பதில் மனுவுக்கு வேதாந்தா தரப்பில் அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு ஒருவாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: