சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று 3ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஊரக பகுதிகளில் 485 முகாம்களும், நகர்புற பகுதிகளில் 119 முகாம்கள் என மொத்தம் 604 முகாம்கள் நடைபெற்றது. தாம்பரம், பல்லாவரம், அஸ்தினாபுரம், சேலையூர் உள்ளிட்ட பகுதியில் நடைபெற்ற முகாமை தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என 4,500க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்று பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்த வந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் தவணை கோவிட் 19 தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 10.88 லட்சம், இரண்டாம் தவணை கோவிட் 19 தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 4 லட்சம் ஆகும். தடுப்பூசி முகாமை தொடர்ந்து பல்லாவரம் நகராட்சியில் உள்ள நெமிலிச்சேரி ஏரியில் உள்ள ஆகாய தாமரை அகற்றும் பணி மற்றும் ஏரியினை ஆழப்படுத்தி கரையை பலப்படுத்தும் பணியினை தலைமை செயலாளர் பார்வையிட்டார். உடன் தமிழ்நாடு அரசு பொது துறை செயலாளர் ஜகநாதன், செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ வேளாண்மை - ஊழவர் நலத்துறை செயலாளர் சமயமூர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தனர்.