சத்தியமங்கலம் அருகே ஆடு திருடிய இந்து முன்னணி மாஜி நகர செயலாளருக்கு தர்மஅடி

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே உள்ள நாடார் காலனி பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (47). இவர், தனது தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மதியம் வடிவேலின் தங்கை சித்ரா, அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது 2 பைக்குகளில் வந்த 4 பேர் திடீரென ஆடு ஒன்றை பிடித்துக் கொண்டு பைக்கில் தப்ப முயன்றனர். சித்ரா சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை பிடிக்க முயன்றபோது ஒரு பைக்கில் வந்த இருவர் தப்பினர். பைக்கில் ஆடுடன் தப்பிச் செல்ல முயன்ற 2 பேரை சுற்றிவளைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து சத்தியமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் சத்தியமங்கலம் வரதம்பாளையத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் (25), சத்தியமங்கலம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த மனோரஞ்சன் (18) என்பது தெரியவந்தது. அவர்களது பைக்கை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் ரஞ்சித்குமார் சத்தியமங்கலம் இந்து முன்னணி முன்னாள் நகரச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: