கோத்தகிரியில் மின்சாரம் பாய்ந்து பலியான காட்டு யானையை கோடாரியால் வெட்டி புதைத்த இருவர் கைது

ஊட்டி: நீலகிரி மாவட்டம், கீழ்கோத்தகிரி அருகே மெட்டுக்கல் பழங்குடியின கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் உலா வந்த காட்டு யானை ஒன்று மின்சாரம் தாக்கி பலியானது. அதை இந்த பகுதியை சேர்ந்த சிலர், யாருக்கும் தெரியாமல் கோடாரிகளால்  துண்டு துண்டாக வெட்டி வனப்பகுதியில் புதைத்தாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், மெட்டுக்கல் கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் (40), காட்டுராஜா (27) மற்றும் நிதிஷ்குமார்(24) ஆகியோர் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதில் நிதிஷ்குமார் இறந்து விட்டார். மற்ற இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர்கள், யானையை துண்டு துண்டாக வெட்டி புதைத்த இடத்தை வனத்துறை அதிகாரிகளிடம் காண்பித்தனர். புதைக்கப்பட்ட யானையின் எலும்புகள், உடல் பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டன. இதனிடையே யானையை துண்டு துண்டாக வெட்டி புதைத்ததாக ஈஸ்வரன், காட்டுராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: