அகார்தலா: ‘‘அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் நீதிமன்ற உத்தரவுக்கெல்லாம் பயப்படாதீர்கள். நீதிமன்ற அவமதிப்புக்காக யாரையும் கைது செய்து விட முடியாது’’ என திரிபுரா மாநில பாஜ முதல்வர் பிப்லாப் தேப் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. திரிபுரா மாநிலம் அகார்தலாவில் ஐஏஎஸ் அதிகாரிகள் சங்க மாநாடு நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக அம்மாநில முதல்வர் பிப்லாப் தேப் பங்கேற்று பேசியதாவது: சில விஷயங்களில் நீதிமன்ற உத்தரவால் பிரச்னை ஏற்படும் என சில அதிகாரிகள் என்னிடம் கூறுகிறார்கள். அது எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. என்ன பிரச்னை ஏற்பட்டு விடும்? நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளாகி விடுவோம் என்பதற்காக சிலர் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்கின்றனர். நான் கேட்கிறேன், நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக யார் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள், சொல்லுங்கள் பார்ப்போம்.