கோஹ்லி 51, மேக்ஸ்வெல் 56 மும்பை அணிக்கு 166 ரன் இலக்கு

துபாய்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 166 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஆர்சிபி தொடக்க வீரர்களாக கேப்டன் கோஹ்லி, படிக்கல் களமிறங்கினர். படிக்கல் ரன் ஏதும் எடுக்காமல், பும்ரா வேகத்தில் விக்கெட் கீப்பர் டி காக் வசம் பிடிபட்டார். கோஜ்லி - ஸ்ரீகர் பாரத் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 68 ரன் சேர்த்தது. பாரத் 32 ரன் (24 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார்.

அடுத்து கோஹ்லி - மேக்ஸ்வெல் ஜோடி சிறப்பாக விளையாடி 51 ரன் சேர்த்தது. அரை சதத்தை நிறைவு செய்த கோஹ்லி, 51 ரன்னில் (42 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 56 ரன் (37 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பும்ரா வேகத்தில் போல்ட் வசம் பிடிபட்டார். டி வில்லியர்ஸ் 11, ஷாபாஸ் அகமது 1 ரன்னில் வெளியேற, ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன் குவித்தது. டேன் கிறிஸ்டியன் 1, ஜேமிசன் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் பும்ரா 3, போல்ட், ஆடம், ராகுல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 20 ஓவரில் 166 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.

Related Stories: