சென்னை: சிட்லபாக்கம் ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஏரியின் அருகே இருந்த சமுதாய நலக்கூடம், தாய் சேய் நல விடுதி ஆகியவை இடிக்கப்பட்டன. இதையடுத்து, ஏரியின் அருகே உள்ள அரசு பள்ளி கட்டிடம் இடிக்கப்படப்போவதாக தகவல் வெளியானது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று அப் பகுதிக்கு நேரில் வந்து, அங்குள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, ஆக்கிரமிப்பு பகுதிகளை பார்வையிட்டார்.