சென்னை: துபாயிலிருந்து பிளை துபாய் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதிலிருந்து பயணிகள் வெளியேறிய பிறகு, விமான நிலைய பெண் லோடர்கள் அந்த விமானத்தை சுத்தம் செய்தனர். அப்போது, ஒரு சீட்டிற்கு அடியில் ஒரு கைப்பை கேட்பாரற்று கிடந்தது. இதுபற்றி விமான நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு வந்து, அந்த கைப்பையை பார்த்தனர். அதில், 519 கிராம் தங்கக்கட்டிகள், மற்றும் 2 செல்போன்கள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.25.5 லட்சம். இதையடுத்து, சென்னை விமான நிலைய மேலாளர் அந்த தங்கக் கட்டிகளையும், செல்போன்களையும் சென்னை விமான நிலைய சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர்.