ஒட்டாவா: கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், இந்தியாவில் இருந்து கனடாவுக்கான விமான சேவையை கனடா அரசு நாளை முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசு, இந்தியாவில் இருந்து வரும் அனைத்து நேரடி வணிக மற்றும் தனியார் பயணிகள் விமானங்களுக்கான தடையை இன்று (செப். 26) வரை பின்பற்றி வந்தது. இந்த தடையாவது தற்போது காலாவதியாகிவிட்டதால், கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுபாடுகளின் அடிப்படையில் இந்திய பயணிகள் இனிமேல் கனடாவுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளது. ‘ஏர் கனடா’ விமானம் நாளை (செப். 27) முதல் இந்தியாவிலிருந்து தனது விமானங்களை மீண்டும் இயக்கும். அதே நேரம் ஏர் இந்தியா விமானம் வரும் 30ம் தேதி முதல் கனடாவுக்கு தனது விமான சேவையை மீண்டும் தொடங்கும்.
கனடா அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘கோவிட்-19 நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த வார தொடக்கத்தில் இருந்து இந்தியாவுக்கான கனடா விமான சேவை தொடங்கும். அதனால், இந்தியாவில் இருந்து கனடாவுக்கு விமானம் புறப்படுவதற்காக திட்டமிடப்பட்ட 18 மணி நேரத்திற்கு முந்தைய கொரோனா நெகடிவ் சான்று எடுத்திருக்க வேண்டும். அவை, டெல்லி விமான நிலையத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஜெனெஸ்ட்ரிங்ஸ் ஆய்வகத்தில் உறுதிசெய்யப்பட வேண்டும். இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அவற்றை வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்’ என்பது போன்ற கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.