சென்னை விமானநிலையத்தில் ஒரே நாளில் ரூ.24 லட்சம் போதைபொருள் பறிமுதல்

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் நேற்று ஒரே நாளில் 7 பார்சல்களில் இருந்த ரூ.24 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் மற்றும் உயர்ரக கஞ்சா போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு நிலவியது. சென்னை பழைய விமானநிலையத்தில் கார்கோ பகுதியில் நேற்றிரவு அமெரிக்காவுக்கு புறப்படவிருந்த ஒரு சரக்கு விமானத்தில் ஏற்றுவதற்கு சரக்கு மற்றும் கொரியர் பார்சல்கள் தயார்நிலையில் இருந்தது. அந்த பார்சல்களை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அமெரிக்காவுக்கு செல்லவிருந்த 4 பார்சல்களில், 2 பார்சல்கள் சென்னை எழும்பூர், எத்திராஜ் சாலை முகவரியிலும், மற்ற 2 பார்சல் சேத்துப்பட்டு முகவரியிலும் இருந்தன. அந்த 4 பார்சல்களிலும் முக்கிய ஆவணங்கள் இருப்பதாக ஒரே மாதிரி குறிப்பிடப்பட்டு இருந்தன. இதனால் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பார்சல்களில் இருந்த செல்போன் எண்களை தொடர்பு கொண்டனர். அப்போது, அந்த செல்போன் எண், முகவரி ஆகிய அனைத்துமே போலி எனத் தெரியவந்தது. இதையடுத்து அந்த 4 பார்சல்கள் குறித்து சென்னையில் பதிவு செய்திருந்த ஏஜென்சி நிர்வாகிகளிடம் விசாரித்தனர்.

விசாரணையில், டெல்லியை சேர்ந்த ஒருவர் ஆன்லைன் மூலம் இந்த பார்சல்களை, சென்னை முகவரியிலிருந்து பதிவு செய்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்த 4 பார்சல்களையும் அதிகாரிகள் பிரித்து சோதனை செய்தனர். இதில், இந்திய அரசால் தடை செய்யப்பட்ட 4,180 போதை மாத்திரைகள் இருந்தன. இவை உடல் வலிமை, சக்திக்காக என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இவை போதை மாத்திரைகளாக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, இந்த மாத்திரைகள் தயாரிப்புக்கும் விற்பனைக்கும் ஒன்றிய அரசு தடைவிதித்துள்ளது. இதேபோல் இந்த மாத்திரைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இவற்றை ஒன்றிய அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறையின் அனுமதியுடன் மட்டுமே அனுப்ப முடியும். ஆனால், இந்த பார்சல்களில் மாத்திரைகளை மறைத்து, முக்கிய ஆவணங்கள் என்ற பெயரில் வெளிநாட்டுக்கு கடத்தி செல்ல முயற்சி நடந்துள்ளது. இதையடுத்து, போதைபொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, 4 பார்சல்களில் இருந்த 4,180 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.20 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த போதை மாத்திரைகளை அமெரிக்காவுக்கு அனுப்ப முயன்ற டெல்லி ஆசாமிகள் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதேபோல், கனடாவிலிருந்து சென்னை முகவரிக்கு பரிசு பொருள் என்று குறிப்பிடப்பட்டு 3 பார்சல்கள் நேற்றிரவு சரக்கு விமானம் மூலமாக சென்னை பழைய விமானநிலையத்துக்கு வந்து சேர்ந்தன. அந்த பார்சல்கள்மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவற்றை பிரித்து சோதனை செய்ததில், அதற்குள் பரிசு பொருட்களுக்குப் பதிலாக, 194 கிராம் பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா போதைப் பொருள் கடத்தி வரப்பட்டிருப்பதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.4 லட்சம். போதைபொருள் தடுப்பு பிரிவு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து இவற்றை பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் அமெரிக்காவுக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள், கனடாவில் இருந்து சென்னைக்கு வந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான உயர் ரக கஞ்சா என மொத்தம் ரூ.24 லட்சம் மதிப்புள்ள போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: