தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா மூன்றாவது அலை தொடங்கவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்.!

தஞ்சாவூர்: தமிழ்நாட்டை பொறுத்தவரை கொரோனா மூன்றாவது அலை தொடங்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் மூன்றாவது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் 745 இடங்களில் நடைபெறுகிறது. தஞ்சை அடுத்த முன்னையம்பட்டியில் நடைபெற்ற மூன்றாவது மெகா தடுப்பூசி முகாமில் கலந்துகொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசிடமிருந்து பணம் செலுத்தி இதுவரை 4 கோடியே 19 லட்சத்து 26 ஆயிரத்து 769 தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளது என்றார். தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்திவிட்டதாக கூறிய அவர், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நாள் ஒன்றுக்கு 2 லட்சத்து 52 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கவில்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். 115 கோடி தடுப்பூசிகள் இந்தியாவிற்கே தேவைப்படும்போது இந்தியாவில் தயாராகும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்பதை ஏற்க இயலாது என்று தெரிவித்த அமைச்சர்,  அதிமுக ஆட்சியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து போதுமான அளவிற்கு விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

Related Stories: