ஏமன் பாலைவனத்தில் 367 அடி ஆழம்: மக்களை அச்சுறுத்தி வந்த மர்மக் குழியில் நீர்வீழ்ச்சி

துபாய்: ஏமன் நாட்டில் உள்ள அல் மாரா பாலைவனத்தின் நடுவில் அமைந்துள்ளது ‘பர்ஹட்டின் கிணறு’ என்று அழைக்கப்படும் மர்மக் குழி, 367 அடி ஆழமும்,  30 மீட்டர் விட்டமும் கொண்டது. மேலும், விசித்திரமான வட்டமான‌ நுழை வாயிலையும் கொண்டுள்ளது. வானிலிருந்து பார்த்தால் சிறிய துளை போன்று காணப்படும். இதனை நரகத்தின் கிணறு என்றும், இதில் பூதம் இருப்பதாகவும் உள்ளூர் மக்களிடையே கருத்து இருந்து வந்தது. மேலும், இது கடுமையான துர்நாற்றத்தையும் வீசி வந்தது.

இதனால், ஓமன் நாட்டின் குகை பயணக் குழுவைச் சேர்ந்த 10 ஆய்வாளர்கள், இந்த மர்ம குழி பற்றி ஆய்வு செய்ய முடிவு செய்தது. ஆய்வு குழுவினர் குழியில் உரிய உபகரணங்களுடன் தைரியமாக‌ இறங்கினர். அதன் உள்ளே நீண்ட குகை போன்று காணப்பட்டது  அதோடு, உள்ளே  சினிமா காட்சிகளில் காட்டப்படுவது போல் அழகிய‌ நீர் வீழ்ச்சியும் தென்பட்டது. அதோடு, ஏராளமான பாம்புகள், இறந்த விலங்குகள், குகை முத்துக்களும் இருந்தன. இவை ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தியது.

நீண்ட காலமாக நிலவி வரும் மூட நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ‘இந்த மர்ம குழியில் எந்த பூதமும் இல்லை. ஏமனின் வரலாறு குறித்த புதிய ஆய்வுகளுக்கான இடமாக இது திகழும்.  லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்த மர்மக்குழி உருவாகி இருக்கலாம். தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, விரைவில் இது குறித்த இறுதி ஆய்வுகள் வெளிவரும்,’ என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Related Stories: