வெளிநாடு செல்பவர்களுக்கு மட்டும் 2 டோஸ் போட்டவர்கள் சான்றிதழில் பிறந்த தேதி: அடுத்த வாரம் முதல் அமல்

புதுடெல்லி: ‘இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட பிறக வெளிநாடு செல்பவர்களின் கோவின் சான்றிதழில், அடுத்த வாரம் முதல் பிறந்த தேதி சேர்க்கப்படும்,’ என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அரசு கடந்த புதன்கிழமை வெளியிட்ட அந்நாட்டின் புதிய பயண வழிகாட்டுதல் பட்டியலில், கோவிஷீல்டு தடுப்பூசி இடம் பெறவில்லை. எனவே, 2 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு கொண்டவர்களும் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், கோவிஷீல்டுக்கு அங்கீகாரம் அளித்தது. ஆனால், தடுப்பூசி போட்டவர்களுக்கு கோவின், தேசிய சுகாதார திட்டம் ஆகியவை வழங்கும் சான்றிதழில் சிக்கல் இருப்பதாக தெரிவித்தது.

இது தொடர்பாக இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தின. இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து பயண வழிகாட்டுதல் பட்டியலில் கோவிஷீல்டும் சேர்க்கப்பட்டது. இந்நிலையில், 2 டோஸ் தடுப்பூசி போட்ட பிறகு வெளிநாடு செல்பவர்களின் கோவின் சான்றிதழில் அடுத்த வாரம் முதல் அவர்களின் பிறந்த தேதியும் சேர்க்கப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்த சான்றிதழில் பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் பிறந்த வருடம் மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது.

* 84 கோடி டோஸ் தடுப்பூசி

* இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 29,616 பேர் புதிதாக தொற்றினால் பாதித்தனர். இதனால் மொத்த பாதிப்பு 3,36,24,419 ஆக உள்ளது.

* கடந்த 24 மணி நேரத்தில் 290 பேர் பலியாகி உள்ளதால், இறப்பு எண்ணிக்கை 4,46,658 ஆக உயர்ந்தது.

* தற்போது 3,01,442 சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* நாடு முழுவதும் இதுவரை 84.89 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Related Stories: