பில்லி, சூனியம் எடுப்பதாக கூறி ரூ80 லட்சம் மோசடி: 4 பேர் கைது

தாம்பரம்: தாம்பரம், கன்னடபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள்  அந்தோணியம்மாள் (41), கற்பகம் (35), அனிதா (29). இவர்களில், கற்பகம் மற்றும் அனிதா சகோதரிகள். ந்தோணியம்மாள், கற்பகம் ஆகியோர், கணவர்களை பிரிந்து தனியாக வசித்து வருகின்றனர். அனிதா குடும்ப பிரச்னையால், அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த பாத்திமா (40), அவரது தம்பி அபு ஹசன் (35), தங்கை ரஹமது பீவி நிஷா (29), அபு ஹசனின் நண்பர் ராஜேந்திரன் (41) ஆகியோர், அந்தோணியம்மாள், கற்பகம் மற்றும் அனிதாவை சந்தித்து, ‘‘உங்களுக்கு  யாரோ பில்லி சூனியம் வைத்துள்ளனர்.

அதனால்தான் கணவர்களை பிரிந்து தனியாக வசிக்கிறீர்கள். குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படுகிறது,’’ என  கூறியுள்ளனர். மேலும், ‘‘சூனியத்தை மந்திரம் செய்து எடுத்துவிட்டால், மீண்டும் கணவர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள், குடும்ப பிரச்னைகள் தீர்ந்துவிடும்,’’ என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பிய மூவரும், சூனியத்தை எடுக்க சம்மதித்தனர்.

இதையடுத்து, சூனியம் எடுப்பதாக கடந்த ஒரு ஆண்டாக, அந்தோணியம்மாளிடம் ரூ30 லட்சமும், கற்பகத்திடம் ரூ30 லட்சமும், அனிதாவிடம் ரூ20 லட்சமும் ஏமாற்றி உள்ளனர். இந்த பணத்தில் பாத்திமா, தாம்பரம் அடுத்த இரும்புலியூர், சந்திரன் நகரில், சொகுசு பங்களா கட்டி  அதில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், பாத்திமா மற்றும் அவரது கூட்டாளிகள் ஏமாற்றி பணம் பறித்தது குறித்து அறிந்த அந்தோணியம்மாள், கற்பகம் மற்றும் அனிதா ஆகியோர் தாம்பரம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் அவர்கள் 4 பேரையும் நேற்று கைது செய்தனர். பாத்திமா மற்றும் அவரது கூட்டாளிகள் பலரிடம், இதுபோல் லட்சக்கணக்கில் பறித்துள்ளதாகவும், அதை  மீட்டுதர, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: