சென்னையில் 9 இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள தடுப்பு பணிகளை முதல்வர் ஆய்வு: விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை: வடகிழக்கு பருவமழையையொட்டி, சென்னை காந்தி மண்டபம் சாலை, இந்திரா நகர், திருவான்மியூர், பள்ளிக்கரணை, வேளச்சேரி ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள தடுப்புப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழையையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை  சென்னை, காந்தி மண்டபம் சாலை, இந்திரா நகர், திருவான்மியூர், பள்ளிக்கரணை, வேளச்சேரி ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், தூர்வாரும் பணிகள், ஆகாயதாமரைகளை அகற்றும் பணிகள் மற்றும் மழைநீர் தேங்கா வண்ணம் மேற்கொள்ளப்பட்டு வரும் இதர வெள்ளத் தடுப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.   

சென்னை, காந்தி மண்டபம் சாலையில் மழைக்காலங்களில் தேங்கி போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக உள்ள வெள்ள நீரையும் அருகில் உள்ள கேன்சர் இன்ஸ்டிடியூட், அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களிலும் தேங்கும் மழைநீரையும் அகற்றும் வகையில் 1,516 மீட்டர் நீளத்திற்கு ₹4.15 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால்கள் தற்போது கட்டப்பட்டுள்ளன. வடிகால்கள் மூலம் வரும் மழைநீர் ஒரு பெரிய கீழ்நிலை தொட்டியில் சேமிக்கப்பட்டு பின்பு சிறு கால்வாய் வழியாக பக்கிங்காம் கால்வாய் மூலம் வெளியேற்ற தற்பொழுது வழிவகை செய்யப்பட்டுள்ளது. இக்கால்வாய்களில் சேர்ந்துள்ள வண்டல்கள், நவீன ஹைட்ராலிக் மற்றும் அதிக உறிஞ்சும் திறன் மற்றும் ஜெட்டிங் வசதி கொண்ட இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு வரும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின்  பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அனைத்து வண்டல் வடிகட்டும் தொட்டிகளை தூய்மைப்படுத்தி, மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யும் பணியையும்  அவர் பார்வையிட்டார். இப்பணிகள் அனைத்தும் ஒரு வாரத்திற்குள் முடிக்கப்பட்டு, இப்பகுதியில் வெள்ள நீர் தேங்கா வண்ணம் துரித நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தினார்.

இதை தொடர்ந்து, இந்திரா நகர் எம்.ஆர்.டி.எஸ். ரயில் நிலையம் மற்றும் திருவான்மியூர் லேட்டிஸ் பாலத்தின் அருகில் பக்கிங்காம் கால்வாயில் 26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் ரோபோடிக் எஸ்கலேட்டர் மற்றும் மிதக்கும் ஆம்பிபியன் இயந்திரம் மூலம் ஆகாயதாமரைகள் அகற்றும் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, வனத்துறை சார்பில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சேர்ந்துள்ள கழிவுகளையும், குட்டைகள் மற்றும் சிறு பாலங்கள் கீழ் பகுதிகளில் சேர்ந்துள்ள கழிவுகளையும் 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் மிதக்கும் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் 18 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பெரும் வடிகால் பணியையும் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். வேளச்சேரி ஏரியில் ஆகாயதாமரை மிக அதிகமான அளவில் வருடம் முழுவதும் வளர்ந்து நீரோட்டத்தை தடுப்பது மட்டுமன்றி, கொசு உற்பத்திக்கும் காரணமாக உள்ளது.

ஆழம் அதிகமுள்ள இந்த ஏரியில் ஆகாயதாமரைகளை நவீன மிதக்கும் ஆம்பிபியன் இயந்திரம் மூலம் அகற்றும் பணிகளை ஆய்வு செய்தார். இதன்மூலம் தற்பொழுது இந்த வருடத்தில் சுமார் 500 டன் ஆகாயதாமரை அகற்றப்பட்டு அவை உடனுக்குடன் லாரிகள் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் சுற்று வட்டாரங்களில் வெள்ளம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி கல்கி நகர் பகுதியில் வீராங்கல் ஓடையில் 20 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியினையும், புதிதாக 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 100 எச்பி பம்பினையும், வேளச்சேரி பகுதியில் ஏ.ஜி.எஸ் காலனி, கல்கி நகர் போன்ற மிகவும் தாழ்வான பகுதிகளில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள நீர் தேக்கத்தை தவிர்த்திட 14 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

முதல்வர் ஆய்வை முடித்தபின்பு, அரசு உயர் அலுவலர்களிடம் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு விரைவாக, முழுமையாக இப்பணிகளை முடிக்கக்கூடிய வகையில், தினமும் கண்காணித்து, பணிகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையினை அனைத்துத் துறை அலுவலர்களும் அளிக்க அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, அசன் மவுலானா எம்எல்ஏ, தலைமைச் செயலாளர் இறையன்பு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அசோக் உபரேதி மற்றும் அரசு, மாநகராட்சி உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: