×

2012ம் ஆண்டு தொடரப்பட்ட நில மோசடி வழக்கு தற்போது வரை நிலுவையில் இருப்பது ஏன்? : உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி : தமிழகத்தில் உள்ள நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகிறா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் நில அபகரிப்பு புகார்களை விசாரிப்பதற்காக கடந்த 2011ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கான தமிழக அரசின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை எதிர்த்து,தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தது. இதைத்தொடர்ந்து மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்,நில அபகரிப்பு சிறப்புப் பிரிவு மற்றும் நீதிமன்றங்கள் விசாரணை நடத்த தடை இல்லை என உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது.

அதன்பின்னர்,கடந்த 2011ம் ஆண்டு தமிழகம் முழுவதும் 36 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து,ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முத்துலெட்சுமி என்பவர் தனக்கு இழைக்கப்பட்ட நில மோசடி தொடர்பான வழக்குகளை விசாரிக்க இதுவரை சிறப்பு நீதிமன்றம் செயல்படவில்லை.எனவே இந்த வழக்குகளை வேறு நீதிமன்ற அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுபாஷ் ரெட்டி மற்றும் ஹெச்.ராய் ஆகியோர் அமர்வு, தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றங்களும்
செயல்படுகிறா? இல்லையா? எத்தனை வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது? 2012ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு தற்போது வரை நிலுவையில் இருப்பது ஏன்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் விரிவான அறிக்கையை 6 வாரத்துக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் அடுத்த விசாரணையை ஆறு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Tags : Supreme Court , உச்சநீதிமன்றம்
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...