உளுந்தூர்பேட்டை : கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரப்பகுதியில் குடிசை வீடுகளில் வசித்து வருபவர்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கடந்த அதிமுக ஆட்சியின்போது அரசு ஐடிஐ பின்புறம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இந்த குடியிருப்பு பகுதிக்கு செல்வதற்காக கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் இணைப்பு சாலை போடப்பட்டது. இந்த சாலை தற்போது முற்றிலும் உள்வாங்கி குண்டும் குழியுமான கந்தலான சாலையாக உள்ளது.
இதுகுறித்து இந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவிக்கும்போது அவசரம், அவசரமாக இந்த சாலை தரமற்ற முறையில் போடப்பட்டதாலேயே 10 மாதம் கூட ஆகவில்லை. இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத அவலநிலையில் உள்ளது. இந்த சாலையின் வழியாக தற்போது புதிய குடியிருப்பு பகுதிக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சாலை போட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் தரமான தார்சாலை போட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.