சின்னசேலம் : கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் எல்லையில் உள்ள வடக்கநந்தல் அரசு விதைப் பண்ணையில் மாவட்ட அளவில் முதன்முதலாக பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, சிவன் சம்பா மற்றும் கருப்பு கவுனி ஆகிய ரகங்களை ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் விதை உற்பத்தி துவக்கப்பட்டுள்ளது. அதை இயற்கை முறையில் சாகுபடி செய்து விதைச்சான்று நடைமுறைப்படி விதை உற்பத்தி செய்து அடுத்த பருவம் முதல், பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மாவட்ட வேளாண் விரிவாக்க மையங்களில் விதை விநியோகம் செய்யப்படும்.
முன்னதாக பாரம்பரிய நெல் நாற்று பிடுங்கும் பணியினை வேளாண் உதவி இயக்குநர் ஆய்வு செய்தார். இதையடுத்து விதைப் பண்ணையில் பாரம்பரிய நெல் நாற்றினை கொண்டு சம்பா சாகுபடி துவக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண் துணை இயக்குநர் சுந்தரம் தலைமை தாங்கி பயிர் நடவினை துவக்கி வைத்தார். இதில் சின்னசேலம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் கலைச்செல்வி, பண்ணை நிர்வாக வேளாண்மை அலுவலர் நித்யா, உதவி வேளாண்மை அலுவலர் சந்திரமோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.