புதுடெல்லி: புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு ஏற்ப, உள்நாட்டில் குறைதீர் அதிகாரிகளை டிவிட்டர் நிறுவனம் நியமித்திருப்பதாக ஒன்றிய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த, ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு டிவிட்டர் மட்டும் இணங்காமல் இருந்தது. புதிய சட்டப்படி, உள்நாட்டை சேர்ந்த குறைதீர் அதிகாரிகளை டிவிட்டர் நியமிக்காததால், இந்தியாவில் வழங்கப்படும் சட்ட பாதுகாப்பை ஒன்றிய அரசு வாபஸ் பெற்றது. இதனால், டிவிட்டரில் வெளியான சர்ச்சைக்குரிய பதிவுகளுக்கு அந்நிறுவனத்தின் மீது போலீசார் பல்வேறு வழக்கு தொடர்ந்தனர்.