வானிலை ஆய்வு மையம் தகவல் தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் மழை பெய்யும்

சென்னை:  தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக வளி மண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த நான்கு நாட்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் நேற்று 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை  பெய்தது. டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்தது. அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 180 மிமீ மழை பெய்துள்ளது. சேலம் 110 மிமீ, சங்ககிரி, திருவாரூர் 90 மிமீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், வங்கக் கடலில் நேற்று ஒரு குறைந்த காற்றழுத்தம் உருவானது. அது மேலும் வலுப்பெற்று வருவதால் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் இன்று முதல் 26ம் தேதி வரை பலத்த காற்று வீசும்.

Related Stories: