சிறுமியை பலாத்காரம் செய்து எரித்து கொன்றவனுக்கு தூக்கு: 5 மாதத்தில் உ.பி கோர்ட் அதிரடி தீர்ப்பு

நொய்டா: உத்தரபிரதேசத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்ற குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் கடந்த ஏப். 15ம் தேதி 14 வயது சிறுமியை மோனு தாக்கூர் (35) என்பவன் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றான். இவன் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354, 326, 452, 302, 376, போக்சோ ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டான்.

இவ்வழக்கை விசாரித்த ஹத்ராஸ் சிறப்பு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட மோனு தாக்கூருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்து போலீஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘குற்றவாளி மோனு தாக்கூர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கு குற்றம் நடந்து 42 நாட்களில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமான முறையில் எரித்து கொன்ற வழக்கு என்பதால், எஸ்.பி. வினீத் ஜெய்ஸ்வால் நேரடி விசாரணை நடத்தினார்.

சாட்சியங்களை உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை பெற்றுத் தரப்பட்டது. இதுகுறித்து அரசு வழக்கறிஞர் ராஜ்பால் திஸ்வர் கூறுகையில், ‘போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரதிபா சக்சேனா, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மோனு தாக்கூருக்கு மரண தண்டனை வழங்கினார். மேலும், குற்றவாளிக்கு ரூ.1.68 லட்சம் அபராதம் விதித்துள்ளார். கிட்டத்தட்ட 5 மாதத்தில் விரைவாக நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது’ என்றார்.

Related Stories: