நாட்டுப்புற கலைஞர்களுடன் பஞ்சாப் முதல்வர் உற்சாக ‘ஆட்டம்’ சமூக வலைதளங்களில் வைரல்

சண்டிகர்: பஞ்சாப்பில் நடந்த நாட்டுப்புறக் கலைஞர்களின் நிகழ்ச்சியில் பங்கேற்ற அம்மாநில முதல்வர், கலைஞர்களுடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடினார். பஞ்சாபில் புதிதாக பதவியேற்றுள்ள முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி,  ஏற்கனவே மாநில  தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி அமைச்சராகவும், பஞ்சாப்  சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில், நேற்று கபூர்தலாவில் நடந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கான நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.  மஞ்சள் தலைப்பாகையுடன், வெள்ளை நிற குர்தா மற்றும் பைஜாமாவை  அணிந்து கொண்டு விழாவுக்கு வந்த முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தார்.

திடீரென, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவர் தங்களுடன் சேர்ந்து நாட்டுப்புற ஆட்டம் ஆடவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதையடுத்து, மேடைக்கு சென்ற முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, நாட்டுப்புறக் கலைஞர்களுடன் சேர்ந்து பாரம்பரிய முறையில் உற்சாகமாக ஆட்டம் போட்டார். குர்மான்  பேர்டி எழுதிய அந்த நாட்டுப்புறப்பாடலுக்கு முதல்வர் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பதிவை முதல்வர் அலுவலகமும், தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. நாட்டுப்புறக் கஞைர்களுடனான முதல்வரின் உற்சாக ஆட்டத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related Stories: