சித்தூர் மாவட்டத்தில் பெய்யும் கனமழை பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் நிரம்பிய ஏரிகள்-விவசாயிகள் மகிழ்ச்சி

ராணிப்பேட்டை: சித்தூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாவட்டத்தில் பல ஏரிகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் கலவகுண்டா அணை நிரம்பியது. இதனால், அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் பொன்னை ஆற்றில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்திலும் அண்மையில் சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் மழைநீர் பொன்னை அணைக்கட்டு மூலம் இரண்டு பிரதான கால்வாய்களில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெரிய காஞ்சிபுரம், சோளிங்கர், கொடைக்கல் உட்பட பல்வேறு ஏரிகள் நிரம்பி வருகிறது.

இதன் மற்றொரு ஆற்றுக்கால்வாய் வழியாக வரும் பொன்னை ஆற்று நீர் கடந்த சில நாட்களாக சென்று ராணிப்பேட்டை அடுத்த குமணந்தாங்கல் எரி நிரம்பி அருகில் உள்ள எகாம்பரநல்லூர், கத்தாரிக்குப்பம், நெல்லிக்குப்பம், லாலாப்பேட்டை ஆகிய ஏரிகளில் நீர் நிரம்பி எடப்பாளையம் அருகே உள்ள ஏரி கோடி போனது.

அவ்வாறு கோடிபோன தண்ணீர் வானாபாடி, செட்டித்தாங்கல், மாந்தாங்கல், அனந்தலை வழியாக சென்று செங்காடு, வள்ளுவம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு செல்கின்றன. இதனால் நூற்றுக்கணக்கான கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயனடையும். இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related Stories: