வாஷிங்டன்: குவாட் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருக்கும் ஜப்பான் பிரதமர் யோஷிஹைடே சுஹாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்த தகவல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் ஜப்பான் பிரதமருடனான சந்திப்பின் போது, இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சி, விநியோகச் சங்கிலி பின்னடைவு, வர்த்தகம், டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் துணை அதிபரான கமலா ஹாரிஸை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது கமலா ஹாரிஸை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, உங்களை வரவேற்க இந்திய மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்றும் கூறினார்.