திருவள்ளூர் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய 5 ஆயிரம் லஞ்சம்: விஏஓ கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர், பெரியகாலனியை சேர்ந்தவர் விவசாயி ஏழுமலை (75). இவரது மகன் சிலம்பரசன் என்கிற ரிச்சர்ட் (30). இவர் தனது தந்தை பெயரிலான நிலத்தின் பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்து தரக்கோரி  வருவாய்த்துறையில் விண்ணப்பித்திருந்தார். வெகு நாட்கள் ஆகியும் பட்டா பெயர் மாற்றம் செய்யப்படாததால் திருப்பாச்சூர் கிராம நிர்வாக அலுவலர் திருமாலிடம் கேட்டுள்ளார். அப்போது திருமால் 5 ஆயிரம் கொடுத்தால் பட்டா பெயர் மாற்றி தருவதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து ரிச்சர்ட் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் பேரில் அவர்கள் கொடுத்த ரசாயனம் தடவிய 5 ஆயிரம் பணத்தை ரிச்சர்ட் கிராம நிர்வாக அலுவலர் திருமாலிடம்  நேரில் கொடுத்தார். அப்பொழுது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி  கலைச்செல்வன் (பொறுப்பு) தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிடித்து கிராம நிர்வாக அலுவலர் திருமாலை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.திருமால் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலக சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: