சென்னை: சென்னையை சேர்ந்த பிரேம்ராஜ் தேவ்ராஜ் டிகுரூஸ் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம், திருமண வெப்சைட் மூலமாக புனேவில் வசிக்கும் பெண் ஒருவரை தொடர்பு கொண்டு, திருமணம் செய்து கொள்வதாக பேசியுள்ளார். திருமணம் செய்துகொள்ளப் போகும் நபர்தானே என்ற எண்ணத்தில் அந்த பெண் இவரிடம் நெருங்கி பழகியுள்ளார். இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட அந்த பிரேம்ராஜ் அப்பெண்ணிடம் ரூ.11 லட்சம் வரை வாங்கியுள்ளார். ஆனால், திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து அந்த பெண், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். மேலும், பிரேம்ராஜ் சென்னையில் இருந்ததால், அவரை அப்பெண் மூலமாக பிம்ப்ரிக்கு வரவழைத்தனர். பிம்ப்ரி வந்த பிரேம்ராஜை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.